வெண்புருவச்சின்னானும் குஞ்சும்

வெண்புருவச்சின்னான் (White-browed bulbul )தனது குஞ்சுக்கு முசுமுசுக்கைப் (மொசுமொசுக்கை) பழத்தைப் புகட்டுகிறது. இப்பழத்தின் சிவப்புநிறத்தோலை நீக்கிவிட்டு சதைப்பகுதியை மட்டும் குஞ்சுகளுக்கு பறவைகள் ஊட்டும். இப்பொழுது அருகில் உள்ள மரத்தில் கூடு கட்டியுள்ள செங்குதச்சின்னானும் (Red-vented Bulbul) தனது குஞ்சுகளுக்காக இப்பழங்களை எடுத்துச்செல்வதைப் பார்த்தேன். இதன் மூலம் முசுமுசுக்கைக் (Mukia maderaspatana) கொடியானது பரவ வழியேற்படுகிறது.

முசுமுசுக்கை கொடி வகையை சார்ந்த ஒரு மூலிகை ஆகும். இது நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. சுவாசக்குழல், சுவாசப்பையில் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம், அழற்சி, ஆகியவற்றை ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டது. மேலும் சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி அதனை சுத்தம் செய்யும் சக்தி உடையது.

இப்பறவைகள் இல்லாவிடில் இந்தக்கொடி இவ்வளவு எளிதாக விதை பரவல் செய்யமுடியாது என்பதும் எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை இப்பறவைகள் இது போன்ற பழங்கள் இல்லாவிடில் உணவின்றித் தவிக்கும் என்பதும். பல்லின, பன்மைச்சூழல் என்பது இதனாலேயே இன்றியமையாததாகும்.


Comments

Popular Posts