அடைக்கலான் குருவியின் அற்புதப்பயணம்

இந்தச் சின்னக்குருவிகளை சிறுவயதிலேயே பார்த்த நினைவுள்ளது. குளங்கள், நீர்நிலைகள் அருகே அவை வரிசையாக மின் கம்பிகளில் உட்கார்ந்திருப்பது எழுதப்பட்ட இசைக்குறிப்புகள் போலத்தோன்றும். அதன் மிக இலாவகமான பறத்தல்:  விரைந்து சில சிறகடிப்புகளில் மேலேறி சட்டென்று மடங்கித் தாழ்ந்திறங்கி பின் தண்ணீரைதொட்டுச் செல்லுவது போல மிதந்தவாறே விரைந்து பறந்து செல்லும்போது ஒரு ஜெட்விமானம் போலத் தோன்றும். அவை ஏன் அப்படிப்பறக்கின்றன என எனக்குத்தெரியாது. இப்போது நான் அதியனுக்குச் சொல்கிறேன்; ”அவைகள் காற்றில் பறக்கும் சிறிய பூச்சிகளையும் கொசுக்களையும், நீரின் மேல்பரப்பில் இருக்கும் பூச்சிகளையும் பிடிக்கத்தான் அத்தனை விரைவாகவும், இலாவகமாகவும் பறக்கின்றன”. இப்போது இந்தக்குருவிகளும், மீன்கொத்திகளும், சின்னான்களும், நீர்க்காகங்களும் அவனது உலகில் இருக்கின்றன. மெல்ல மெல்ல அவற்றின் பெயர்களும், அலகுகளும், நிறங்களும் சிறகடிப்புகளும் வாழிடங்களும் கழுத்தசைவுகளும் அவன் மனதின் தெளிந்த நீர்ப்பரப்பில் கோவில் குளத்தில் வாழும் மீன்களென மேலெழும்பி துலக்கம் கொள்கின்றன.




ஒரு அடைக்கலான் குருவி (Common Swallow) இரண்டாகப் பிரிந்த வாலை அதன் வாலை நொடிக்கும் குறைவான நேரத்தில் அசைத்து விருட்டென மேலெழும்பி மிக வேகமாக காற்றின் ஒரு பக்கத்தில் சிறகசைப்பின்றி வழுக்கியவாறே கீழிறங்குகிறது. பிறகு நினைத்துக்கொண்டாற்போல குளத்தினுள் இருந்த முள்பத்தை ஒன்றின் மேல் வந்து உட்கார்ந்து தலையைத்திருப்பி அவனைப்பார்க்கிறது. இந்த அடைக்கலான் குருவிகள், தகைவிலான், தலையில்லாக் குருவிகள், தாம்பாடி, தைலான், மாரிக்குருவி என்று பல பெயர்களில் தமிழ்நாட்டில் அழைக்கப்படுகின்றன. இமயத்தில் 3000 அடி உயரம் வரை இவை வசித்து, பெட்டையோடு கதை சொல்லித்தூங்கிபின் பாடி விழிப்புற்று, குஞ்சுகளை வளர்த்து மழைக்காலத்தில் தெற்கே நாடுமுழுவதும் பறந்து திரியவருகின்றன. தலைப்பகுதியில், நெற்றியும் தொண்டையும் துருச்சிவப்பு; தலையின் பின் பகுதியும் மற்ற மேல் பகுதிகளும் உலோகக் கருநீலம்; வயிறு வெள்ளை. தொண்டையில் உள்ள கருநீல வளையத்தை கம்பிவால் தகைவிலானிடம் (Wire-tailed Swallow) பார்க்கமுடியாது. அதேபோன்று இங்கு வலசை வரும் தகைவிலான்களுக்கு வயிறு வெள்ளையாக இருப்பது போலல்லாமல்  சைபீரியாவில் இருந்து வடகிழக்குப் பகுதிகளுக்கு வலசை வரும் தகைவிலான்களுக்கு வயிறு துருவேறின நிறத்தில் இருக்கும் என்கிறார் சலீம் அலி. இதல்லாமல் நீலகிரியின் மலைப்பகுதிகளில் காணப்படுவது நாட்டுத் தகைவிலான் (House Swallow). இதற்கு வாலில் காணப்படும் கம்பிபோன்ற நீட்சி இராது. மேலும் இது வீட்டுச்சுவர்கள், மதகடிகள், வீட்டின் இறவாரம் போன்ற பாதுகாப்பான மேற்சரிவு உள்ள இடத்தில் சேற்று உருண்டைகளைக் கொண்டு கூடமைத்து முட்டையிடம் என்கிறார் இரத்தினம். இவைகளுக்கு வீடுகளில் அடைக்கலம் கொடுக்கப்படுவதால் அடைக்கலான் குருவி என்ற பெயர் வந்திருக்கலாம்.

அதியனிடம் சொன்னேன், இதோ இந்த முள்மேல் உட்கார்ந்து உன்னையும் என்னையும் பார்க்கிறதே இந்தக் குருவி இது தன் இறக்கைகளால் பறந்து இமயத்தில் இருந்து இங்கு வந்திருக்கிறது. சில நேரம் இது அஸ்ஸாமில் இருந்தோ இல்லை பாகிஸ்தானின் மலைமுகடுகளில் இருந்தோ வந்திருக்கலாம். எப்படி இருப்பினும் இது போனமாதம் அல்லது இந்த மாதத் தொடக்கத்தில் தான் இங்கு வந்திருக்கவேண்டும். மறுபடியும் ஏப்ரல் இறுதியில் இமயமலைப்பகுதிக்கு கிளம்பிவிடும். அமெரிக்காவில் இருந்துகூட பறவைகள் வரும் என்பதை அறிந்திருந்த அவனுக்கு பாகிஸ்தானில் இருந்து இந்தக்குளத்துக்கு ஒரு பறவை வரக்கூடும் என்பதை உள்வாங்கிக்கொள்ள சிறிது நேரம் பிடித்தது.  ஒருபெருங்கதையாடல் இப்படித்தான் எங்காவது ஒரு மூலையில் கட்டுடையும்.

Comments

தைலாங் குருவியை இவ்வளவு அருகில் எப்படி படம்பிடித்தீர்கள்? எனக்கு வாய்த்ததெல்லாம் சற்று தொலைவில் இருப்பவைதாம். நீங்கள் என்ன லென்ஸ் பயன்படுத்துகிறீர்கள்?

உங்கள் அலைபேசி எண் பகிரமுடியுமா? என்னுடையது - 98413 90327, மின்னஞ்சல் - thangavelg@gmail.com

இப்போதுதான் உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தேன். தாமதத்துக்கு மன்னிக்கவும். நன்றி. உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.
moses prabudoss said…
ஆம்

Popular Posts