கண் எனும் கடல்

முன்கதை அல்லது படம்பிடித்த காதை

உறங்காவில்லி என்ற வீரன் ஒருவன் பொன்னாச்சியார் என்கிற ஆடல்மகளின் கண்ணழகில் வீழ்ந்து அவளுக்கே பணிசெய்து இருந்தபோது இராமனுஜர் அரங்கனின் கண்ணழகைக் காட்டி அவரைக் (அவர்களை) கவர்ந்துகொண்டது வரலாறு.

***

மூன்றுவருடங்களுக்கு முன் அந்தப்பறவையை அந்திமயங்கிய நேரத்தில் பார்த்தேன். ஒரு பறவை சட்டென சாலையோரம் இருந்த முட்புதருக்குள் புகுந்தது போல இருந்தது கண்டு அருகில் சென்று குனிந்து, நிமிர்ந்து பார்த்தபோது அதன் கண்தான் உடனே தெரிந்தது. சிக்கலான முட்கிளைகளில் அது மிக இலாவகமாக வளைந்தும், தத்தித் தத்தி நெளிந்தும் அது போய்க்கொண்டே இருந்தது. அதன் கண் மட்டும் மனதில் கிடந்து ஒளிர்ந்துகொண்டே இருந்தது. ஏனோ அதைத் தேடிக்கண்டு கொள்ளவோ, அறிந்துகொள்ளவோ முனையவில்லை. ஆனால் அந்தக் கண் நினைவில் எப்போதாவது வரும், போகும். கடந்த சனிக்கிழமை கூத்தப்பார் ஏரிக்கரையில் பறவைகளைப் பார்த்துக்கொண்டே வருகையில் ஏதோஉணர்வில் தலையுயர்த்திப் பார்க்கையில் அதே கண்கள். மரமும் நாட்டு கருவேல மரம். மறுபடியும் முட்கிளைகளுக்குள் அதன் நளினமான நகர்வுகள். அதன் பளிங்குப் பச்சை அலகில் ஒரு பூச்சிக்கூடு போன்ற ஏதோ இருந்தது. நண்பர் பாலாபாரதியை அழைத்துக்காட்டுவதற்குள் பறந்துவிட்டது. சில பதிவுப்படங்கள் மட்டும் எடுத்துக்கொண்டேன். ஞாயிறு அன்று HAPP வளாகத்தினுள் இருக்கநேர்ந்தது. அப்படியே அங்கும் பறவையைத்தேடி நடந்துகொண்டிருந்த பொழுது இணைப்பறவைகள் இரண்டு நீண்ட வாலோடு சட்டென ஒரு புதரில் இருந்து அடுத்த மரச்செறிவுக்கு பறந்து சென்றன. அந்த முட்புதர்ச்செறிவு என்னை அவைகளை நெருங்க விடவில்லை. சட்டென அந்தக் கண்களை மறுபடியும் கண்டேன். எப்படியாவது அவைகளை ஒரு நல்ல படமெடுக்க அந்த மரச்செறிவைச் சுற்றிச்சுற்றி வந்தபோது ஒரு அழைப்பு வந்தது அலைபேசியில். பறந்துவிட்டன. இன்று அதைப்படமெடுத்தே ஆகவேண்டுமே என்று நினைத்துக்கொண்டே வண்டியை ஓட்டிக்கொண்டே வந்தபோது  சோழமாதேவிக்கருகே கண்ணாடியை ஒட்டிப்பறந்து சென்று சாலையோர மரத்தில் நுழைந்தது நீளவால் கொண்ட அந்தப்பறவை. அப்படியே நிறுத்தி, சன்னல் கண்ணாடியை இறக்கி பதிவுப்படங்களை எடுத்துக்கொண்டிருந்த போது இன்னொரு அழைப்பு. அழைப்பை முடக்கிவிட்டு, வண்டியை விட்டிறங்கி ஏறக்குறைய ஓடி புதரை சுற்றுவழியில் அணுகி, நுழைந்து நிமிர்ந்து தேடியபோது அது ஒரு கழைக்கூத்தாடியைப்போல முட்கிளைகளுக்குள்ளும், இலைமறைப்புகளுக்குள்ளும் வளைந்து தவழ்ந்து நகர்ந்தவாறே என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது. சில படங்களை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். அந்தக்கண்கள் ஒருவழியாக கிடைத்துவிட்டன.





***

கதை

அந்தப்பறவை பச்சைவாயன் என்றழைக்கப்படும் Blue-faced Malkoha (Small green-billed Malkoha- Salim Ali). இதன் அலகு பளிங்குப் பச்சை நிறம். கண்களைச் சுற்றி தூவிகள் அற்ற கடல் நீலத்தோல் காணப்படும். நீண்டு போகபோக குறுகியதாக வெள்ளை முனைகளோடு கூடிய வாலிருக்கும். பசுமை படர்ந்த முதுகும் வெளிர்சாம்பல் மார்பும் கொண்டது. முட்புதர்களில், மரங்களில் புகுந்து கம்பளிப்பூச்சிகள், சிறுபூச்சிகள், வெட்டுக்கிளிகள் போன்றவற்றை உண்ணும். குயிலின் இனத்தைச் சேர்ந்த இது குயிலைப்போலலாது கூடுகட்டி முட்டை இட்டு குஞ்சுபொறிக்கும்.

***

பாடல்:

துண்ணெனும் நெஞ்சினான்; துளங்கினாள்; துணைக்
கண் எனும் கடல் நெடுங் கலுழி கான்றிட,
மண் எனும் செவிலிமேல் வைத்த கையினாள், 
பண் எனும் கிளவியால் பன்னி, ஏங்கினாள்.    
                                                            (கம்பராமாயணம், அயோத்தியா காண்டம் 2460)

இராமன் சீதைக்கு தந்தை இறந்ததைக் கூறினான். (அதுகேட்ட சீதை) துண்ணெனும் நெஞ்சினாள் - திடுக்கிட்ட மனம் உடையவளாய்; துளங்கினாள் - நடுங்கி;  துணைக் கண் எனும் கடல் - இரண்டாகிய கண்கள் எனும்கடல்; நெடுங் கலுழி கான்றிட - நீண்ட
கண்ணீர் வெள்ளத்தைக் கக்க;  மண் எனும்செவிலி மேல் வைத்த கையினாள் - பூமி என்கிற செவிலித்தாயின்மேல் வைத்த கைகளை உடையவளாய்; பண் எனும் கிளவியால் - இசைப்பாடல் என்று சொல்லத்தக்க சொற்களால்; பன்னி - பலபடியாகப் புலம்பி; ஏங்கினாள்வருந்தினாள்.

Comments

அருமையான வர்ணனை. அபாரம்.

Popular Posts