இரண்டு இழப்புகள்

2018 தமிழ்நாட்டுக்கு பெரிய இழப்புகளை சுமத்தி விட்டு விடைபெறப் போகிறது. ’கஜா’ புயலின் சீற்றத்தால் டெல்டா பகுதிகள் 20 வருடங்கள் பின்னோக்கிப் பயணப்பட்டதைப் போல சிதைந்து கிடக்கின்றன. மக்கள் நம்பமுடியாதவாறு கைவிடப்பட்டுள்ளார்கள். அது புயலின் கொடுமையைக் காட்டிலும் கொடுமையானது. முகத்தில் அறைவது. புயல் ஒரு துரதிர்ஷ்டம்; ஆனால் இப்படிக் கைவிடப்படுதல் என்பது துரோகம்.

ஆனால் இந்தப்புயலின் சேதங்களை சிறிதென ஆக்கும் இழப்புகள் இன்னும் இரண்டு அண்மையில் நிகழ்துள்ளன. ஒன்று ஐராவதம் மகாதேவன் அவர்களின் மறைவு. இரண்டாவது ‘நெல்’ ஜெயராமன் அவர்களின் மறைவு.

தமிழின் தொன்மையைத் தனது கடும் உழைப்பால், ஆய்வுத் திறத்தால் உலக அரங்குக்கு எடுத்துச்சென்றவர் ஐராவதம் மகாதேவன். 38 ஆண்டு காலம் உழைத்து அவர் உருவாக்கிய பழந்தமிழ்க் கல்வெட்டுகள் குறித்த ஆய்வு நூல் (Early Tamil Epigraphy, Harward University press and CreA, 2003) இந்திய வரலாறு என்றாலே, அது வட இந்திய வரலாறுதான் என்றிருந்த நிலையை மாற்றுவதற்கு உதவியது. தமிழ் பிராமி என அவரால் அழைக்கப்படும் பழந்தமிழ் எழுத்துகளையும் ஆரம்ப கால வட்டெழுத்துகளையும் புரிந்துகொள்ள முழுமையானதொரு வழிகாட்டியாக அது விளங்குகிறது. கிமு இரண்டாம் நூற்றாண்டளவில் தமிழகத்திலிருந்த கல்வி நிலையையும் அந்நூல் எடுத்துக்காட்டுகிறது. அரசவையிலும், சமூகத்தின் மேல் மட்டத்திலும், வழிபாட்டிடங்களில் மட்டுமே எழுத்தறிவு  மற்ற பகுதிகளில் காணப்பட்ட இந்தக் காலப்பகுதியில் தமிழகத்தில் கல்விநிலை பரவலாக எல்லாத் தரப்பினரிடையேயும் காணப்பட்டது என்று நிரூபித்தார். அவரது ஆய்வின் மற்றொரு மிகமுக்கியமான முடிவு, இந்திய வரலாற்றினை முற்றிலும் புதிய திசையில் திருப்பியது. அது சிந்துசமவெளி தொடர்பான ஆய்வு. சிந்துவெளி நாகரீகம் ஒரு ஆரியக்கலப்பில்லாத அதற்கு முந்தைய நாகரீகம் என்று நிறுவியதோடு மட்டுமின்றி அது ஒரு திராவிட நாகரீகம் என்பதையும் நிறுவினார். தவிர சிந்துவெளிக் குறியீடுகளைப் படிப்பதற்கு நம்பகமான ஒரு முறையை ஐராவதம் மகாதேவன் ஏற்படுத்தவும் செய்தார்.

கல்வெட்டுக்கள்  தென் இந்தியாவில் தான் அதிகமும் கிடைத்துள்ளன. கல்வெட்டுக்கள், நடுகற்கற்கள், பானை போன்றவற்றில் காணப்படும் பொறிப்புகள், இலக்கிய ஆதாரங்கள், வேர்ச்சொல் ஆராய்ச்சி, சமூக ஆய்வுகள் போன்றவற்றின் மூலம் உண்மையான வரலாறு எழுதப்பட முடியும். ஆனால் வரலாறு எப்போது அரசியலின் வழியே பார்க்கப்படுகிறது. அதனால் இந்திய வரலாறு பெரிதும் எழுதப்படாமல் சில வசதியான சமூக சித்திரங்களைக் கொண்டு தொடுக்கப்பட்டதாகவே உள்ளது. இச்சூழலில் ஐராவதம் மகாதேவன் போன்றோரின் உண்மையான ஆய்வு முயற்சிகள் மிகவும் போற்றத்தக்கனவாய் உள்ளன. அவருக்கு தமிழ்ச்சமூகம் மிகவும் கடன்பட்டுள்ளது. அவருக்கு அஞ்சலி.

“சிந்துவெளி குறியீடுகள் திராவிட மொழிக்குறியீடுகளே”

An Interview with Iravatham Mahadevan

http://www.varalaaru.com

***

‘நெல்’ ஜெயராமன் என்று பரவலாக அறியப்படுகிற ஜெயராமன் தஞ்சைப் பகுதியில் இருந்து  தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல்வகைகளில் 174 வகைகளை மீட்டெடுத்து அவற்றை விவசாயிகளிடமும், மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அரும்பணியாற்றினார். நெல் திருவிழா என்ற அவரது ஆண்டு தோறும் நடக்கும் பரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்து பரப்பும் விழா பல விவசாயிகளை பாரம்பரிய விதைகளின் பக்கம் திருப்பி உள்ளது.

பாரம்பரிய விதைகள், வகைகள் எந்த வகையில் முக்கியமானவை என்ற கேள்வி எழலாம். உலகமயமாக்கல் எல்லா பன்மைக்கூறுகளையும் அழித்து, எல்லாவற்றையும் தொழிற்சாலை உற்பத்திப்பொருட்களாகக் குறுக்குகிறது. உணவு, உடை, வாழிடம் போன்றவை வாழும் இடத்தால், விளைபொருட்களால், இயற்கைச்சூழலால் தீர்மானிக்கப்பட்டு வந்தது. இயற்கையால் தீர்மானிக்கப்படுகிறது என்பது உண்மையில் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையில் நடக்கும் உரையாடலின் வழி கிடைத்த விளைவே. எனவே உணவு அங்குள்ள நீர், நில வளம், தட்பவெப்ப நிலை, உடல்கூறுகள் இப்படி பலவற்றைச் சார்ந்தது. ஆனால் அமெரிக்காவிலும் சீனாவிலும், தயாரித்து, ஜப்பான் வழியாக உலகமெங்கும் வந்து கொட்ட இப்படியான பன்மைக்க்கூறுகள் கொண்ட வாழ்க்கை முறை அனுமதிக்காது. அது மட்டுமல்லாது, பயிர்களின் நோய்களும் அதற்கான மருந்தும், பூச்சிக்கொல்லியும் உலகளாவிய சந்தையாக இருப்பது எத்தனை இலாபகரமானது! எனவே பன்மைத்தன்மை எல்லா வகையிலும் ஆதிக்க, சுரண்டல் சக்திகளால் வெறுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் பல நூறு வகையான நெல் வகைகள் சென்ற நூற்றாண்டில் விளைவிக்கப்பட்டு வந்தன. ஆனால் இப்பொழுது உரத்தையும் பூச்சிக்கொல்லியையும் நம்பி சில வகை நெற்பயிர்கள் விளைச்சலையும் இலாபத்தையும் மட்டும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டு விளைவிக்கப்படுகின்றன. இது விவசாயிகளின் பொருளாதாரத்தையும் தற்சார்பையும் அழிக்கிறது; உணவை ஒரு உற்பத்திப்பொருளாக்குகிறது.

இந்தச்சுழலில் ‘நெல்’ ஜெயராமனின் பங்களிப்பு மிகவும் பெறுமதி வாய்ந்தது. தமிழகத் தற்சார்பையும் மீளக்கொண்டுவர நிகழ்த்தப்படுகின்ற இப்போரில் அவர் மிகமுதன்மையானவராக செயல்பட்டார். சர்வதேச அளவில் செயல்படும் வியாபார அரசியலில் இத்தகைய முயற்சிகள் பெரிய தாக்குதல்கள். புற்று நோய் கண்டு சடுதியில் முடிந்திருக்கிறது அவரது பெருவாழ்வு. அவருக்கு என் அஞ்சலி.



Comments

Popular Posts